சத்துணவு, ஊட்டச்சத்து மையங்களுக்கு வழங்கப்படும் அரிசி போன்றவற்றில் இரும்பு சத்து சேர்க்கப்படுகிறது
செறிவூட்டப்பட்ட உணவு குறித்த விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்;
நாகை மாவட்ட தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்புத்துறை சார்பில், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகையை அடுத்த பொருள்வைத்தசேரியில் இயங்கி வரும் ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில், செறிவூட்டப்பட்ட உணவு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு, கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கோமதி தலைமை வகித்தார். நாகை நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் ஏ.டி.அன்பழகன் மற்றும் திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஆண்டனிபிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். அவர்கள் பேசியதாவது இந்திய மக்களிடையே நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக, பல்வேறு நோய்கள் வருகின்றன. குறிப்பாக, தொற்றாவகை நோய்கள் வருவதற்கு இவையே முக்கிய காரணமாக அமைகிறது. இவற்றை தடுத்து, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும், உப்பு, அரசி, கோதுமை, பால், எண்ணெய் போன்றவற்றில் நுண்ணூட்டச்சத்து சேர்க்கப்பட்டு +F* குறியீட்டுடன் உணவு விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாடு அரசு ரேசனில் வழங்கப்படும் அரசி, சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து மையங்களுக்கு வழங்கப்படும் அரசி போன்றவற்றில் இரும்பு சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்தி தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினர். கூட்டத்தில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில், கீழ்வேளூர் மற்றும் நாகை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் திலிப் நன்றி கூறினார்.