மனைவி இறந்த துக்கத்தில் அன்றே தூக்கத்தில் கணவனின் உயிர் பிரிந்தது
மயிலாடுதுறை அருகே மணக்குடி கிராமத்தில் ஒரே நாளில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மனைவி இறந்த நிலையில் துக்கம் தாளாமல் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரது உடலும் ஒரே நேரத்தில் தகனம்;
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மணக்குடி நடுத்தெருவில் வசித்தவர்கள் வயது முதிர்ந்த கலியபெருமாள் (86), வேம்பு (71) தம்பதியினர் இவர்களுக்கு 2 மகன்கள் 4 மகள்கள். ஒரு மகன் இறந்துவிட்டார். கூலி வேலை செய்யும் மூத்த மகன் ரவியுடன் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் உடல் நல குறைவு ஏற்பட்ட வேம்பு நேற்று மாலை உயிரிழந்தார். மனைவி இறந்த தூக்கம் தாழாமல் வேதனையில் படுத்திருந்த கணவர் கலியபெருமாள் எழுந்திருக்கவில்லை. இரவு 12 மணிக்கு கலியபெருமாள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஒரே நாளில் மனைவி இறந்த துக்கத்தில் கணவனும் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த வயது முதிர்ந்த தம்பதிகளுக்கு மாலை அணிவித்து கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இருவரையும் ஒரே நேரத்தில் இடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்தனர்.