பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை தாக்கிய தனிநபர், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

அரியலூர் அருகே பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை தாக்கிய தனிநபர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-10-04 11:52 GMT
அரியலூர், அக்.4- அரியலூர் அருகே பொதுப்பாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை தாக்கிய தனிநபர் மற்றும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் மாவட்டம்  பெரியநாகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுப்பிரிங்கியம்  பாலக்கரை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்கள் மூன்று தலைமுறைகளாக பாலக்கரை கிராமத்திற்கு  செல்வதற்காக பொதுப் பாதையை பயன்படுத்தி வந்தநிலையில்  அந்த  பொது பாதையை தனிநபர் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்துள்ளதால் பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு செல்வதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் பொதுப் பாதையை மீட்டுத் தரக் கூறி  பல கட்ட போராட்டங்கள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து புகார் மனு அளித்தும்  எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில குழு உறுப்பினர்  ஐ.வி.நாகராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, கே.கிருஷ்ணன், மூத்த தலைவர் சிற்றம்பலம், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.சாமிதுரை, அ.அருண்பாண்டியன், பி.துரைசாமி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள்  மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடி பொதுபாதையை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டு பாதையை மீட்டனர். அப்போது அரியலூர் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பொதுப்பாதையை மீட்க முயற்சித்த போது பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொதுப் பாதையை ஆக்கிரமித்தவர் கல்வீசி தாக்கியதிலும், போலீசார் தாக்கியதிலும் என பாலக்கரை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் மனைவி சித்ரா, பாலு மனைவி ஆனந்தவள்ளி மதியழகன் மகன் மங்கள ராஜா உள்ளிட்ட  3 பேர் பலத்த காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 மூலம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் தனிநபர்  ஆக்கிரமித்து வேலி அமைத்து இருந்த பொது பாதையை பொதுமக்கள் மீட்டனர். இதில் 150 -க்கும் மேற்பட்டோரை போலிசார் கண்மூடித்தனமாகவும் காட்டுமிராண்டித்தனமாகவும் தாக்கியதுடன், பலவந்தமாகவும், குண்டுகட்டாகவும் தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர்.  இதுகுறித்து தமிழ்நாடு மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளருமான ஐ. வி நாகராஜன் கூறும்போது :- நியாயமான போராட்டத்தை மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்களை டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் கலவரத்தை ஏற்படுத்தி சீர்குலைக்கு முயற்சித்துள்ளார் இவர் மீது மாவட்ட காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,மேலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்ரா, ஆனந்தவள்ளி மங்கள ராஜா உள்ளிட்ட 3 பேருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும், மீட்கப்பட்ட பொது பாதையை முறையாக பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு வருவாய் துறையும் காவல்துறையும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்தார் - இந்நிலையில் நேற்று அதாவது (04.10.25) அன்று இது முற்றிலும் தவறு என அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதற்கு  மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பாக போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் காட்டுப்பிரிங்கியம் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் பொதுமக்கள் மீது கல்வீசி தாக்கியதற்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பலவந்தமாகவும், குண்டுகட்டாகவும்  தூக்கி போலீஸ் வேணில் ஏற்றி  கைது செய்தும், கலவரத்தை தூண்டும் வகையில் நடந்து கொண்ட டிஎஸ்பி ரவிச்சந்திரன் மீது மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் காந்தி பூங்கா முன்பாக கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில குழு உறுப்பினர் சின்னை பாண்டியன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல்  ஏ.கந்தசாமி, வி.பரமசிவம், டி அம்பிகா, வி.பரமசிவம், தா பழூர் ஒன்றிய செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அருணாச்சலம், ஆண்டிமடம் வட்ட செயலாளர் வேல்முருகன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ரவீந்திரன், மைதீன்ஷா, கோவிந்தராஜ், பி.பத்மாவதி, ஆண்டிமடம் அருணாச்சலம், மீனா, பல்கீஸ், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் அரியலூர் அண்ணா சிலை அருகில் போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அ.அருண்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன்,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, துரைஅருணன், திருமானூர் ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.சாமிதுரை, மூத்த தலைவர் சிற்றம்பலம் கண்டன உரை நிகழ்த்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் தனலட்சுமி, பாக்கியம், செந்துறை அறிவழகன் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News