முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15,764 பயனாளிகள் பயன் பெறவுள்ளனர் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்

உணவுப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்பது திட்டத்தினுடைய சிறப்பாகும். எனவே வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.;

Update: 2025-08-12 11:07 GMT
பெரம்பலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப்பொருட்களை வழங்கும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15,764 பயனாளிகள் பயன் பெறவுள்ளனர் என மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தகவல். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" இன்று (12.08.2025) சென்னை, தண்டையார்பேட்டை, கோபால் நகரில் தொடங்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில், பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட துறைமங்கலம் ஔவையார் தெரு, வெங்கடேசபுரம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் ஆகிய பகுதிகளில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை வழங்கினார். மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் வயது முதிர்ந்தவர்களிடம் குடிமைப்பொருட்களை வழங்கி கூறுகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்களைப் போன்ற வயது முதிர்ந்தோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை உணர்ந்து, அவர்களின் வீடு தேடி சென்று பொது விநியோகத்திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். எனவேதான் உங்களுக்கு இந்த குடிமைப் பொருட்கள் வீடு தேடி வந்து வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார். பொருட்களைப் பெற்றுக் கொண்ட திருமதி செல்லம்மாள் கூறுகையில், என்னுடைய கணவர் இறந்து பல ஆண்டுகளாகின்றது. குழந்தைகளும் இல்லை. யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக வசித்து வருகிறேன். வயது முதிர்வின் காரணமாக ரேசன் கடைக்கு நடந்துசென்றுகூட பொருள்வாங்க இயலான நிலையில், மிகவும் சிரமப்பட்டு வந்த எனக்கு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் என்னுடைய வீட்டிற்கே குடிமைப் பொருட்களை அமைச்சரே வந்து வழங்கியது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னைப் போன்ற ஆதரவற்றோர்களுக்கு ஆதரவளிக்கும் திட்டமாக இத்திட்டம் உள்ளது. எனக்கு மகன், மகள் இல்லாத குறையை நீக்கி மகனாக என் வீட்டிற்கே அரிசி, பருப்பு பொருட்களை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி கூறுவதாக தெரிவித்தார். பின்னர் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் பெறுவதில் சிரமமாக இருப்பதை உணர்ந்து, அவர்களது இல்லம் தேடி உணவுப்பொருட்கள் வழங்கும் வகையில் தாயுமானவர் என்ற திட்டத்தினை சென்னை இன்று தொடங்கி வைத்துள்ளார்கள். அதனைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கும் வகையில், பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துறைமங்கலம், வெங்கடேசபுரம் மற்றும் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட தேவையூர் ஆகிய பகுதிகளில், 70 வயது கடந்தவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான திட்டம். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உணவுப் பொருட்கள் அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படும் என்பது திட்டத்தினுடைய சிறப்பாகும். எனவே வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் இனிவரும் காலங்களில் எவ்வித சிரமமும் இன்றி பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். பெரம்பலூர் மாவட்டத்தில் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 15,764 வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தினை முதன் முதலாக செயல்படுத்தினார்கள். விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதனை செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு தயார் நிலையில் உள்ளது. சூழ்நிலைக்கேற்றவாறு விவசாயிகளுக்கு தடை இல்லாமல் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு உண்டான நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 3,200 பணியிடங்களை நிரப்பும் வகையில் எழுத்து தேர்வு முடிவு பெற்றுள்ளது. மதிப்பெண் அடிப்படையில் அவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, 3,200 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். என தெரிவித்தார். இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் க.பாண்டியன், துணை பதிவாளர்கள் .பா.சிவக்குமார் (பொ.வி.தி), மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், நகர்மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், நகர்மன்றத் துணைத் தலைவர் ஆதவன், அட்மா தலைவர் திரு.வீ.ஜெகதீசன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜ்குமார், துரைசாமி, பெரம்பலூர் வட்டாட்சியர் திரு.பாலசுப்பிரமணியன், பெரம்பலூர் 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரியா மணிவாசகம், மற்றும் அரசு அலுவலர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News