நாமக்கல் : அரசுப்பள்ளி மாணவர்கள் சார்பில் தொட்டிபட்டி ஊராட்சியில் 2 ஆயிரம் பனை விதைகள் நடும்விழா!

2000 பனை விதைகள் நடக்கூடிய நிகழ்வை நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்,நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப.மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.;

Update: 2025-10-25 18:17 GMT
அழிந்து வரும் பாரம்பரிய பனைமரத்தை மீட்டெடுக்க, பனை விதை நடும் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சுமார் 100க்கும் மேற்பட்ட நாமக்கல் அரசு பள்ளி மாணவ- மாணவிகள் திரண்டு வந்து, ஆர்வத்துடன் பங்கேற்று 2 ஆயிரம் பனை விதைகளை போட்டி போட்டுக் கொண்டு நட்டனர்.நாமக்கல் தொட்டிபட்டி ஊராட்சியில் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவத் தொண்டர்கள் தொட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப்படை மாணவத் தொண்டர்கள் என 100க்கும் மேற்பட்ட மாணவத் தொண்டர்கள் இணைந்து நாமக்கல் தொட்டிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கொக்கர செல்லியூர், மணியாரம்புதூர், தொட்டிபட்டி, ஆகிய பகுதிகளில் உள்ள ஏரிக் கரையோரங்கள், நீர்நிலை பகுதி கரை ஓரங்களில் சுமார் 2000 கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனர்.
பனை விதைகள் நடக்கூடிய நிகழ்வை நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி. எஸ் .மாதேஸ்வரன் எம்பி,நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ப. மகேஸ்வரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். தொட்டிபட்டி கிராம நிர்வாக அலுவலர் ரேவதி வழிகாட்டுதலின்படி மேற்கண்ட பகுதிகளில் பனை விதைகள் நடப்பட்டன.இந்த நிகழ்வில் நாமக்கல் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட தொடர்பு அலுவலர் ஆ.இராமு, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம்,பள்ளித்துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி,தொட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி,நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பாவையரசி, உதவி திட்ட அலுவலர் சுமதி ஆசிரியர்கள் ஜெகதீசன்,ப.மரகதம் ,சரவணன்,தொட்டிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணவேணி, ஆசிரியர்கள் விணுபிரியா,விஜயலட்சுமி, மணிமேகலை,கோமதி,சுந்தரேசன் ஆகிய ஆசிரியர்களும் இணைந்து மேற்கண்ட பனை விதைகள் நடக்கூடிய நிகழ்வில் இணைந்து ஈடுபட்டனர்.
பாரம்பரிய பனை மரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், பனை ஓலையில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் எளிதில் கெட்டுப் போவதில்லை என்றும், பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு, பதநீர், வெல்லம், பனங்கிழங்கு போன்றவை நம் உடலுக்கு நன்மை பயக்கும் உணவுப் பொருட்களாக விளங்குவதாகவும், பழந்தமிழர்களின் வாழ்வில் பனைமரம் கற்பக விருட்சமாக கருதப்பட்டதாகவும், யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!! என்ற பழமொழி கருத்து உயர்ந்து நிற்கும் பனை மரத்திற்கும் பொருந்தும் என இதன் ஏற்பாட்டாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Similar News