ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளிலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு சிறப்பு குழுக் கூட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் 21 வார்டுகளிலும் அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் தலைமையில் வார்டு சிறப்பு குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.;
அரியலூர், அக்.25- ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் அசோக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அரசாணை எண்.324 நகராட்சி நிருவாக மற்றும் குடிநீர் வழங்கல் (தேர்தல்) துறை நாள். 17.10.2025 இல், மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடிப்படை சேவைகளை மேம்படுத்திட அப்பகுதி வார்டு உறுப்பினர் தலைமையில் மாநகராட்சி / நகராட்சி / பேரூராட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு அவ்வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் வகையில், வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்களை 27.10.2025, 28.10.2025 மற்றும் 29.10.2025 ஆகிய தினங்களில் ஏதேனும் ஒரு நாளில் கீழ்க்கண்ட பொருள்கள் குறித்து விவாதித்து முன்னுரிமை அடிப்படையில் ஏதேனும் மூன்று (3) கோரிக்கைகள் மட்டும் செயல்படுத்தும் விதமாக கோரிக்கைகளை பெற்று நடவடிக்கை எடுத்திட ஆணையிடப்பட்டுள்ளது. எனவே, ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் வரும் 27.10.2025 (திங்கள்), 28.10.2025 (செவ்வாய்) மற்றும் 29.10.2025 (புதன்) ஆகிய 03 தினங்களில் சம்மந்தப்பட்ட வார்டு உறுப்பினர் தலைமையில் அந்தந்த உள்ளாட்சி துறையின் அலுவலக கூட்டுநர் மூலம், குடியிருப்பு நலச்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பு வார்டு குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்படி சிறப்பு வார்டு குழுக் கூட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது வார்டுகளில் முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து மூன்று கோரிக்கைள் தேர்வு செய்து முதல்வரின் முகவரியில் பதிவு செய்திட பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறும் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.