நகைக்கடை உரிமையாளர் வீட்டில் 60 பவுன் நகைகள் கொள்ளை .

போலீசார் விசாரணை

Update: 2024-07-16 04:02 GMT
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே ராம்நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் (வயது 46). இவர், அயோத்தியாப்பட்டணம் பஸ் நிறுத்தத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஜனார்த்தனன் குடும்பத்துடன் சென்றார். நேற்று அதிகாலை வீடு திரும்பிய அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்கு உள்ளே சென்று ஜனார்த்தனன் பார்த்த போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொள்ளை தொடர்பாக ஜனார்த்தனன் கொடுத்த புகாரின் பேரில் காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஜனார்த்தனன் வெளியூர் சென்றதை அறிந்த கொள்ளையர்கள், வீட்டை நோட்டமிட்டு ஆட்கள் இல்லை என்பதை தெரிந்து கொண்ட பிறகே இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். எனவே இந்த கொள்ளையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இருந்தாலும் அவரது வீடு இருக்கும் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஏதாவது உருவம் பதிவாகி இருக்கிறதா? என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மர்மநபர்கள் கைவரிசை காட்டிய இந்த கொள்ளை சம்பவம் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News