மருத்துவமனை ஊழியரை கட்டிப்போட்டு பணம், செல்போன் பறிப்பு

திருச்செந்தூர் அருகே தனியார் மருத்துவமனை ஊழியரை கட்டிப்போட்டு பணம், செல்போனை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-04-10 02:12 GMT

பணம், செல்போன் பறிப்பு

விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த கணேசன் மகன் சக்திகுமார் (22). திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவர் திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டினம் குறிஞ்சி நகர் 2-வது தெருவில் உள்ள வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கி உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் உடன் தங்கியிருப்பவர்கள் ஊருக்கு சென்றனர். சக்திகுமார் மட்டும் வேலை முடிந்து இரவு அறையில் தனியாக தங்கி உள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் 2 பேர், அறையில் புகுந்து சக்திகுமாரிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது கை, கால்களையும், வாயில் துணியை வைத்தும் கட்டியுள்ளனர். பின்னர் அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான செல்போனையும் பறித்துச் சென்றனர். சக்திகுமார் பெரும் போராட்டத்திற்கு பிறகு பல்லால் கடித்து வாயில் இருந்த துணியையும், கை கால்களில் கட்டி இருந்ததையும் அவிழ்த்து, ஓடி வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் நடந்தே திருச்செந்தூரை நோக்கி சென்றதை பார்த்துள்ளார். பின்னர் சம்பவம் குறித்து சக்திகுமார் கொடுத்த புகாரின் பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News