போலியோ சொட்டு மருந்து முகாம் !
நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்க 777 மையங்கள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதார துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-28 10:08 GMT
போலியோ சொட்டு மருந்து
போலியோ சொட்டு மருந்து
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. அதில் ஆட்சியர் அருணா முகாம் ஏற்பாடுகளை சரியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுசாமி கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில், தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், சத்துணவு மையங்கள் ஆகிய இடங்களில் வரும் மார்ச் 3ம் தேதி நடக்கிறது. மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகள், குடிசைப் பகுதிகள், பணிநிமித்தமாக இடம் பெயர் மக்கள் வாழும் பகுதிகள் ஆகிய இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த தீவிர போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 வயதிற்குட்பட்ட 59,132 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 777 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் பொது சுகாதாரதுறை பணியாளர்களுடன் பிறதுறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என முகாம் ஒன்றுக்கு 4 நபர்கள் வீதம் பல்வேறு துறைகளை சார்ந்த 3,108 பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். மேலும், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள் மற்றும் வடமாநில தொழிலாளிகள் உள்ள தேயிலை தோட்டங்களில் குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலம் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் காரணங்களுக்காக விடுபடும் குழந்தைகளை கண்டறிந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களில் இந்த பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பார்வையிட்டு, சொட்டு மருந்து வழங்குவார்கள். போலியோ சொட்டு மருந்து வழங்குவதன் மூலம் குழந்தைகளுக்கு எந்தவிதமான பின் விளைவுகளும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.