புதிய தமிழகம் கட்சி 25 வருடங்களாக சேவை செய்து வருகிறது – ஷியாம் கிருஷ்ணசாமி
அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பரப்புரை மேற்கொண்டார்.;
பிரச்சாரம்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஆவாரம்பட்டி, இனாம் செட்டிகுளம், அம்பேத்கர் நகர், தென்றல் நகர், கொத்தங்குளம் உள்ளிட்ட 17 கிராமங்களில் அதிமுக வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி பரப்புரை மேற்கொண்டார். அவருக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பேசும் போது, புதிய தமிழகம் கட்சி சார்பில் கடந்த 25 வருடங்களாக தென்காசி தொகுதியில் பணியாற்றி வருகிறோம். பதவியில் இல்லாவிட்டாலும் போராட்டங்கள் சேவைகள் செய்து வருகிறோம். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவுடன் இந்த தேர்தலை நாங்கள் சந்திக்கிறோம். வரும் தேர்தலில் வெற்றி கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளது. கடந்த 25 வருடங்களாக தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி அடைந்தவர்கள் பெயர்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பது யாருக்குமே தெரியவில்லை.
இந்தியா வளர்கிறது, தமிழ்நாடு வளர்கிறது என்கிறார்கள். ஆனால் தென்காசி மக்களின் வாழ்வாதாரம் உயரவில்லை. தொழில் வளம் முதல் அடிப்படை வசதிகள் வரை செய்து தர வேண்டுமென்றால் பாராளுமன்ற உறுப்பினர் வலிமையானவராக இருக்க வேண்டும். இருக்கின்ற வேட்பாளர்களில் மிகவும் வலிமையானவர் ஆக இருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு வாக்காளர்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். வெற்றி பெற்ற பின்னர் உங்களது கோரிக்கைகள் வீடு வீடாக வந்து நிறைவேற்றப்படும்.