சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டை ஜூன் 30 வரை செல்லுபடியாகும்
வரும் 31-ம் தேதி வரை பயன்படுத்தும் வகையில் காலக்கெடுவுடன் வழங்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களுக்கான கட்டணமில்லா பயண அட்டையை ஜூன் 30-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.;

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கும் வகையில் மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டு செப்.7-ம் தேதி முதல்கட்டமாக மாநகர போக்குவரத்துக் கழகத்தில் இணையவழியில் பயண அட்டை பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் இணையவழியில் பயண அட்டை பெறும் நடைமுறையை செயல்படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு போதிய கால அவகாசம் தேவைப்படும் நிலையில், ஏற்கெனவே பயனாளிகள் பயன்படுத்தி வரும் மார்ச் 31-ம் தேதி வரை செல்லத்தக்க கட்டணமில்லா பயண அட்டைகளை ஜூன் 30-ம் தேதி வரை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.